About Me

'நான்' என்னும் மையத்தை மட்டுமே அச்சாகக் கொண்டு என்னையே சுற்றி வந்து கொண்டிருக்கிறேன்.., இந்த பூமியைப் போல. ஆனாலும் என்னைச் சூழ்ந்திருக்கும் எண்ணிலடங்கா கோள்களை அவைகளின் கவனம் கலையாது கவனித்துக் கொண்டு, அவைகளின் தடயம் பதியாது தனித்து நிற்க விரும்புகிறேன். இருப்பினும் சில நட்சத்திரங்களின் தாக்கங்கள் என்னையும் அறியாமல் அவைகள் பால் ஈர்த்துக் கொள்கின்றன.., சூரியனைப் போல, சுற்றி வரச் செய்கின்றன. பல சுழற்சிப் பாதைகளின் சிக்கல்களினூடே, இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறேன் எனக்கான சிறு நிலாவினை.

Monday, July 30, 2007

Nature Nurtures.... but how ??

இறைவன் இந்திரி யத்தினா லொருகரு
இயல்பாய் வெளிவந்து கொண்ட தோருரு
வளியதன் செவியாய் விண்ணதன் வாயாய்
விழியென அனலும் கூர்நாசியென புனலும்
விளைநில மேனியென பூதங்களே புலன்களாய்
பிறந்த பிள்ளைக் கிட்டபெயர் இயற்கை


நொடிப் பொழுதில் நெடிது யர்ந்த
நங்கைக்கு நல்லதோர் இல்வாழ்வு நல்க
நேசக்கரம் நீட்டினான் காலப் புருஷன்
கணவன் கைக்காரியத் தினால்கன் னியவள்
கண்களின் அம்சமாய் இரவியும் திருமேனி
பிரதியாய் பனிமலையும் நாசியின் வாசமாய்
ஆழ்கடலும் பின்னிவை சார்ந்த மதிமுகிலும்
புல்லும் செடிகொடியும் மரமும் காடுமெனப்
பெற்றுப் போட்டாள் இயற்கை அன்னை


பனியுருகி பிரவாகமென உருவம் எடுத்து
பாயுமருவியாய் ஓடுமாறாய் பெருகுமூற்றாய் தலைமுறைப்
பரிணாமமாய் தனது மற்றொரு பரிமாணமாய்
பிரியத்தோடு படைத்தாள் அப்பெருந் தேவியே!!


சார்ந்தே இருந்தும் சுந்தர வாசம்
செய்யும் சுந்தர செல்வங்களை சுவீகரிக்க
செய்தாள் முதல் உயிர் புழுவாக
பதியின் துணையில் புழு பறவையென
மாறிபின் மிருகமாகி பின் மனிதனானது
பரிணாம வளர்ச்சி என்னும் பெயரோடு


காலதேவன் தன்னாயுள் கூட்டும் பொருட்டு
தினம்சில உயிர்களென கொன்டான் காவு
பதியும் பரிணாமமும் வளர்ச்சியில் போட்டியிட
மனித இலக்கு இயற்கைக் கெதிராகிட
தாயைச் சேதம் செய்யும் சேய்களாய்
மனிதம் மறந்த மானிடர் செயல்கள்

பூபாரம் பொறுக்க பூதேவி சிறக்க
கணமொரு உயிரென கூட்டினான் காலன்
ஊனுயிரை ஊனாக உண்ணும் கணவன்
கனநேரம் கண்பார்த் தான்கைப் பிடித்தவளை
நரைத்த மயிரை நினைத்தே நொந்து
விதியின் வலியால் வாடினாள் நங்கை

புத்தூயிர் புகட்ட எண்ணிய பதியவன்
சம்சார உடலில் ஊற்றினான் மின்சாரம்
இதயதிற் குப்பதில் இடமாறியது மின்னாக்கி
தாரத்தின் வதனத்தில் அரிதாரமாய் ரசாயனம்
மின்னணுக்கள் ஊடுருவி இருந்தன அவளணுக்களை

பாதச்சுவடின் மறைவில் பலகாலச் சுவடுகள்
செயற்கையாய் செதுக்கினான் செழித்த சிற்பத்தை
இன்று இயற்கை ஆனாள்(ல்) இயந்திரமாய்..

Sunday, July 29, 2007

Kumbakonam Fire Accident - A Retention.

கும்பகோணம்
இப்போது
கர்ணகொடூரம்.


ஆண்டவா!
அதிகாரிகளின்
அலட்சியத்தை
அறிவிக்க..

நிர்வாகிகளின்
பேராசையை
பிரஸ்தாபிக்க...

ஊழியர்களின்
கவனக் குறையை
கவனிக்க...

மழலை உயிர்கள்
என்பது
மிகவே மிகுதி.

குழந்தைகளென்றால்
கொள்ளை பிரியமெனில்
நீயே இங்கு வரலாமே!!
இத்தனை பேரை
மொத்தமாய்க்
கூட்டிச் சென்றாயே!!

நெருப்பே!!
எரியும் போதே
உன் இதயத்தையும்
எரித்து விடுவாயோ!
உன் கோரப் பசிக்கு
குழந்தைகள் தானா
கிடைத்தார்கள் ??

தீபங்களுக்கு
கொள்ளி வைத்ததில்
குதூகலப்ப்டாதே.
இப்போது
விறகுகளும்
உனை ஏற்றிட
கூச்சப்படுகின்றன..
கற்பூரம் கூட
தலை குனிகிறது..


நிர்வாகமே!!!
உன் சீர்கேட்டின்
சாட்சியாய்
இச்சம்பவம்
காலத்தின் பதிவேட்டில்..

நீ வருமானத்திற்கு
வகுத்த வழியில்
வருகிறது அவமானம்.

உன் பணத்தாசை
இன்று பிணக்குவியலை
பரிசளித்திருக்கிறது.

பல நூறு
குழந்தைகள்
காத்திட்ட
தொன்னூறு
தியாக மலர்கள்
சாந்தி பெற

இனியேனும்
திருந்தி விடு..

இனியும்
பள்ளிக்கூடங்கள்
பலிகூடங்கள்
ஆக வேன்டா..

Ream of Dreams...

தீப்பிடிக்கும் கட்டிடம்

தனித்தீவில் உல்லாசம்

அலவுதீன் விளக்கு என் கையில்

ராஜ உடையில் ரதத்தில் பவனி

பல சமயம் நானே ஹிட்லர்

சில சமயம் நானே கிருஷ்ணன்


அவ்வப்போது

கைக்கெட்டாத் தேவதைகளின்

உறவு..


எல்லா வக்கிரங்களுக்கும்

வடிகாலாய்,

பிச்சைப் பாத்திரமாய்

என் கனவுகள்.




காலை நேரத்து

கழிப்பறை சத்தங்களில்

கரைந்து போகின்றன

என் நேற்றைய கனவுகள்...




என்றாலும்,

சந்தோஷத்தோடே

தூங்கச் செல்கிறேன்,

இன்றைய கனவுகளை

எதிர்பார்த்துக் கொண்டு...